Ads

ads header

Ad Code

Google adsense

Tuesday, November 5, 2019

வெட்ட வெட்ட துளிர்க்கும்.....

சில உண்மைகள் கசப்பது போல் இருந்தாலும் உண்மை ஒரு போதும் கசக்காது.

இந்து மதத்தைப் பற்றி ஒரு ஜெர்மன் பெண்ணிடம் பேசியதில் தெரிந்து கொண்டேன்

சனிக்கிழமை கோவிலுக்கு சென்றபோது அந்த காட்சி கிடைத்தது.

அசல் குஷ்புவுக்கு சித்தப்பா பெண் ஜாடையில் ஜெர்மன் பெண் ஒருவர் சேலைகட்டி  நின்றுகொண்டிருந்தார்,

அம்மணி ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கமாம், ஜெர்மனியிலிருந்து வந்திருக்கிறார்கள், அவரின் உடன் இருக்கும் அந்த பக்தைகள் பிரேசில், பெல்ஜியம், லண்டன், இன்ன பிற நாடுகள்.

அந்த ஜெர்மனி பெண்ணிடம் கத்தோலிக்க மதத்தில் இருந்து எப்படி இந்து தர்மத்துக்கு வந்தீர்கள் என முதலில் விளையாட்டாக கேட்டாலும் அந்த வெள்ளை அம்மணி சொல்ல சொல்ல இந்த பாட்சா படத்தில் ரஜினி சொல்ல சொல்ல அப்படியொரு வியப்பாக இருந்தது.

மத விளக்கத்தை அப்படி துல்லியமாக சொன்னாள் அந்த தேவதை.

ஆம் கிறிஸ்தவம் ஒரு கட்டளையிடும் மதம், இதோ கிறிஸ்து அவரை விசுவாசி இல்லை என்றால் நமக்கு நரகம் என்பதை தவிர ஒன்றுமில்லை.

அந்த பைபிள் என்பதை தாண்டி வேறு ஏதுமில்லாதது சுருக்கமாக கிறிஸ்தவம் என்பது பழைய பள்ளத்தை மூடிவிட்டு அதன் மேல் அமைத்த சிறு குளம்.

ஆனால் இந்துமதம் என்பது கடல், இந்துமகா சமுத்திரம் என்பது இந்து மதத்திற்கே பொருந்தும்.

அது மிக சுதந்திரமான மதம், பாவம் செய்யாதே என சொல்லும் ஆனால் பாவம் செய்தால் மறுபடி மறுபடி பிறந்து பாவத்தை தொலைக்க அது வாய்ப்பளிக்கும்.

அன்பே அதன் பிரதானம், அதன் தத்துவமும் ஆழமும் அகலமும் மிக மிக அதிகம், உலகிலே ஆன்மீக தத்துவத்தை அது எளிதாக சொல்வது போல் இன்னொரு மதம் சொல்லமுடியாது.

இந்துமதம் என்பது அறிவியலும் உளவியலும் ஆன்மீகமும் கலந்த புள்ளி, அதில் நின்றால் உடல் கெடாது , மனம் கெடாது, உள்ளம் கெடவே கெடாது

நாங்கள் ஐரோப்பியர்கள் எல்லாம் சுதந்திரமான மனப்பான்மை கொண்ட நாட்டின் மக்கள், எங்களுக்கு இதுதான் மிக பொருத்தமாக இருக்கின்றது, இம்மதம் யாரையும் காயப்படுத்தாது என்பது அதன் மகா சிறப்பு அது.

அம்மணிக்கு எல்லா தத்துவமும் தெரிந்திருக்கின்றது, அத்வைதம், த்வைதம், சைவம் வைணவம் என அது சொல்லி கொண்டே இருக்க அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது

யார் அவர்கள்? எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்தவர்கள் ஆனால் உண்மை இந்த மதத்தில் இருக்கின்றது என ஓடிவந்து நிற்கின்றார்கள் ?

இந்துமதத்தில் சாதி உண்டே உங்கள் நாட்டில் அந்த வர்ணாசிரம தத்துவத்தை எப்படி பின்பற்றுகின்றீர்கள் என கேட்டால் அம்மணி சிரித்துவிட்டார்.

அது ஒரு காலத்தில் யூதமத கட்டுப்பாடு போல இங்கும் இருந்திருக்கலாம், காலம் மாற மாற அதுவும் மாறிவிட்டது.

இதோ நாங்கள் இந்துக்கள், ஆனால் ஜாதி என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது அவசியமுமில்லை, எனக்கு தெரிந்து இந்த வார்த்தை உங்கள் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பயன்படுமே அன்றி உண்மையான, பாமர இந்துக்களுக்கு அல்ல‌.

விடாமல் விவாதம் சென்றது, இந்த அசைவத்தை எப்படி விட்டீர்கள் என கேட்டால் அந்த தேவதை மாபெரும் தத்துவத்தை சொன்னது.

"கொஞ்சநாள் அதிலிருந்து விலகி இருங்கள், மறுபடி அதன் பக்கம் செல்ல மனம் வராது, வரவே வராது. அதை நினைத்தாலே அது நமக்கான உணவு அல்ல என்ற எண்ணம் தானாய் வரும்"

இன்னும் எவ்வளவோ கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் சொன்னது, எல்லா கேள்விக்கும் அவர்களிடம் பதில் இருக்கின்றது

இந்தியா ஒரு ஞான பூமி என்பதும், அதன் கலாச்சாரமும் ஆலயங்களும் காலம் காலமான தெய்வீக தத்துவங்கள் எனும் பெரும் நம்பிக்கையும் அவர்களிடம் தெரிகின்றது

கண்ணனும் ராமனும் வாழ்ந்த பூமியின் கலாச்சாரத்தில் வாழ்வது பெரும் வரம் என அவர்கள் பூரிக்கின்றார்கள்.

விஞ்ஞானம், பணம் என ஐரோப்பாவும் அமெரிக்காவும் பறந்தாலும் அவர்களின் உண்மை மனம் மெய்ஞானம் தேடி இங்குதான் வருகின்றது

விஞ்ஞானத்தை எந்த நாடும் கொடுக்கலாம், ஆனால் மெய்ஞானத்தை இந்நாடு மட்டுமே கொடுக்கமுடியும் என மனபூர்வமாக நம்பி ஓடிவருகின்றார்கள்

திருமணம் செய்யமாட்டார்களாம், கடவுளுக்காக கிறிஸ்தவ கன்னியர் இருப்பது போல கண்ணனுக்காக அவர்கள் வாழ்வார்களாம்.

இவ்வளவுக்கும் அவர்களுக்கு கல்வி வேலை இன்னபிற கொடுத்து மதமாற்றம் நடக்கவில்லை, சூரியன் முன் பனி உருகுவது போல தானாய் நடந்திருக்கின்றது.

எங்கள் நாட்டில் பலர் இந்துக்களில் இருந்து கிறிஸ்தவராய் மாறும் பொழுது பலர் மாற்ற படாதபாடு படும்பொழுது உங்கள் நாட்டில் நிலை என்ன என கேட்டேன் அம்மணி இப்படி சொல்லிற்று,

உங்கள் நாட்டில் இந்துக்கள் கிறிஸ்தவர்களாய் மாறும் வேகத்தில் எங்கள் நாட்டில் கிறிஸ்தவர் இந்துக்களாய் மாறிவருகின்றனர்

நாளையே இந்தியா கிறிஸ்தவ நாடானாலும் நாளை மறுநாளே அது மறுபடி இந்து நாடாகும் அதில் சந்தேகமில்லை வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் அது.

ஆக ஐரோப்பா கிறிஸ்துவத்தை இங்கே தள்ளிவிட்டு இந்து மதத்தை அது எடுத்து கொண்டிருக்கின்றது

புல் அதிகமானால் மானும் மான் அதிகமானால் புலியும் அதிகமாகும் என்பது இயற்கையின் கணக்கு.

மதங்களுக்கும் அதே தத்துவம் இருப்பது ஆச்சரியம்.

அவர்களிடம் பேச பேச அங்கேயே உத்திராட்சம் கொடுத்து அமர வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் மேலோங்கியது,

அடச்சீ .. இருந்தால் அந்த காஞ்சிமடத்தின் பழைய மகான் சந்திரசேகர சாமி போல அல்லவா ஒரு துறவி இருக்க வேண்டும். என்ற நினைவும் அந்த முகமும் வந்தது.

சென்று வருகின்றேன் என கிளம்பும்பொழுது இந்திய பாணியில் வணங்கி ஹரே கிருஷ்ணா என அவர்கள் சொல்லும் பொழுது  இனம்புரியா மகிழ்வொன்று வந்து சென்றது.

பகவான் கண்ணன் அப்படியான இடத்தை உலகில் பெற்றிருக்கின்றான், அவனை உணர்ந்து கொண்ட பக்தைகள் அவனை உலகில் எல்லா மூலையில் இருந்தும் வணங்கி கொண்டே இருக்கின்றார்கள்.

நாஸ்டர்டாமஸ் சொன்னபடி ஐரோப்பா உலகின் மிக பழமையான மதத்தை ஒரு காலத்தில் ஏற்றே தீரும் என்பது தெரிகின்றது

கண்ணனும் ராமனும் அவர்களை அப்படி ஆட்கொள்கின்றார்கள்.

No comments:

Post a Comment

Powered by Blogger.

Ad

Ad Code

Google Ad