கற்றதனால் ஆன பயன்

கற்றதனால் ஆன பயன் (சிறுகதை)
********************************************

அந்தப் பேருந்து சென்னையிலிருந்து திருவாரூருக்கு விரைந்து சென்று கொண்டிருந்தது. சாலை வளைந்து வளைந்து இருப்பதால் பேருந்தின் ஓட்டத்திற்குத் தகுந்தவாறு அதிகாலை நேரக் காற்று சிலுசிலுவென்று வீசிக் கொண்டிருந்தது. ஓவியாவையும் பேருந்து ஓட்டுநரையும் தவிர நடத்துநர் உள்பட அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். குமாரவேல் ஓவியாவின் தோளில் சாய்ந்திருந்தான்.

திருமணமாகி நாலாவது நாள் குமாரவேலின் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஓவியா M.Sc., B.Ed. படித்துவிட்டு, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தந்தை பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தவள். எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுத்துக் கொண்டிருந்தவள். தன்னால் முடிந்தவரை பிள்ளைகளுக்கு நல்லமுறையில் பாடம் கற்பித்து, அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி நல்ல மதிப்பெண்களையும் பெற வைத்தவள்.

26 வயது நிரம்பிய ஓவியாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு குமாரவேலு M.A., B.Ed. அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்டது.

மாப்பிள்ளையின் ஒரே கண்டிஷன் ஓவியா வேலைக்கெல்லாம் போகத் தேவையில்லை. எங்கள் வீட்டையும், தோட்டத்தையும் பார்த்துக் கொண்டு என் அம்மாவிற்கு உதவியாக இருந்தால் போதும் என்பதுதான்.

இதற்கு நான் ஏன் படிக்க வேண்டும்? படிப்பு என்பது சம்பளத்திற்கு மட்டுமல்ல. நாலு குழந்தைகளுக்கு நம்மால முடிந்தவரை அறிவு வளர்ச்சிக்கு உதவுவதுதானே. இந்த மாப்பிள்ளை தேவைதானா அப்பா? என்று போராடியும் பார்த்துவிட்டாள். உனக்குப் பின்னால் தங்கைகளையும் பார். நான் இன்னும் இரண்டு வருடத்தில் ஓய்வு பெற்று விடுவேன். அதற்குள் இவர்களைக் கரையேற்ற வேண்டும் என்று முடிவாக இருந்துவிட்டார்.

அப்பா சொல்வதுதான் வேதவாக்காகக் கருதும் அம்மா. பெண்களை உயிராகப் பார்க்காமல் பொருளாகப் பார்க்கும் வரை பெண் பிள்ளைகளின் நிலை இதுதான்.

அவளுடைய பள்ளியில் விடைபெறும் பொழுது தலைமையாசிரியரும், மாணவர்களும் மிகவும் வேதனைப்பட்டார்கள்.

சன்னாநல்லூர் என்று நடத்துனர் குரல் கொடுக்க, தூக்கத்திலிருந்த குமாரவேல் விருட்டென்று கண்விழித்து இறங்கணும் என்று கூறிக் கொண்டே ஓவியாவை எழுந்திருக்கச் சொல்லி சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.
காலைப்பொழுது விடிந்து கொண்டிருந்தது. என்னண்ணே கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுடுச்சா என்று கேட்டுவந்த ஆட்டோ டிரைவரின் வண்டியில் ஏறி அமர்ந்தான்.

ஆட்டோ, அழகிய வயல்வெளிகள் இருபுறமும் இருக்க நடுவில் இருக்கும் சிமெண்ட் சாலையில் சென்றது. 3 கி.மீ. தூரம் போனதும் நெடுஞ்சேரி எனும் சிறிய கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது. அவனுடைய அம்மா வாசலிலே வரவேற்றாள். மருமகளின் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாள். முனியம்மா என்று கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரி ஓடிவந்தாள். வாங்கய்யா என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள்.

இதுதான் முனியம்மா. நம்ம வீட்டு வேலைக்காரி. இவளோட புருசன் நம்ம தோட்டத்திலே வேல பார்க்கிறான். ஓவியாவிற்கு அறிமுகப்படுத்தினான் குமாரவேல். முனியம்மா பவ்யமாகக் கும்பிட்டாள். சென்னையில் எல்லோரிடமும் சகஜமாகப் பழகியவளுக்கு இங்க இவர்கள் எல்லாம் அடிமைகள் போலவும், தான் எஜமானி போலவும் மாறிப்போனது ஓவியாவிற்குச் கூச்சமாக இருந்தது.

அன்று முழுவதும் வீடு, வாசல், தோட்டம் என்று பொழுது போனாலும் ஓவியாவால் இன்னும் இந்தக் கிராமச் சூழலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாணவர்களுக்கு ஆங்கிலம், கணக்கு, அறிவியல் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவளுக்கு இங்கு எப்படிப் பொழுது போக்குவது என்பதே நினைக்க நினைக்க கஷ்டமாக இருந்தது.

அத்தை நன்றாகப் பேசுகிறார்கள், குமாரவேலும் அன்புடன் நடந்து கொள்கிறான். ஆனால், இன்னமும் இவளால்தான் ஒன்றிப் போக முடியவில்லை.

குமாரவேலு விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டான். நன்னிலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி புரியும் குமாரவேல், மாலையில் சன்னாநல்லூரில் மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுக்கின்றான். சுற்று வட்டார எல்லாப் பகுதியிலிருந்தும் மாணவர்கள் இங்கு படிக்கிறார்கள். பள்ளியில் எப்படியோ டியூசன் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு நன்றாகச் சொல்லித் தருவான். இந்த நான்கைந்து வருடங்களாக திருவாரூர் மாவட்டத்தில் நல்ல மதிப்பெண் பெறும் பிள்ளைகள் எல்லாம் இவனிடம் டியூசன் படித்தவர்கள்தான்.

இன்னும் 3 மாதங்களில் நடக்கவிருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெறும் பிள்ளையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மேலும் பயிற்சியளித்துக் கொண்டிருந்தான்.

ஓவியாவிற்கு, தன்னை வீட்டுச் சிறையில் வைத்து விட்டார்களோ என்கிற அளவுக்கு வீடு, தோட்டம் என்றுதான் இருக்க முடிந்ததே தவிர வேறு எந்த வகையிலும் நேரத்தைக் கடத்த முடியவில்லை. தொலைக்காட்சி பார்க்கின்ற ஆர்வமும் அவளுக்கு இல்லை. அத்தை தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி ஏதாவது சொல்லுவார்கள். இவளுக்கு ஒன்றுமே புரியாது. காலம் முழுக்க இப்படியேதான் கழியப் போகிறதா? என்னைப் போன்ற எத்தனை பெண்கள் படித்துவிட்டு அந்தப் படிப்பில் எந்த நன்மையும் விளைந்துவிடாமல் இப்படித் திருமணம் செய்து கொண்டு அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களோ!

அம்மா!

முனியம்மா வாசலில் நின்று கூப்பிட்டாள். பக்கத்தில் ஒரு சிறிய பெண். பள்ளிப் பையோடு நின்றிருந்தாள். அத்தை வீட்டிற்குள் வரச் சொன்னார்கள். என்ன செவ்வந்தி எப்படியிருக்க? நல்லாப் படிக்கிறீயா?

படிக்கிறேன் பாட்டி. துறுதுறுவென்றிருந்தாள். குமரியாக மாறக்கூடிய பருவத்திலிருந்தாள்.

ஓவியா இதுதான் முனியம்மா பொண்ணு. 10ஆம் வகுப்புப் படிக்குது. நல்லாப் படிப்பா. நம்ம குமாரவேலு மட்டும் இந்தப் பிள்ளைய டியூசன்ல சேர்த்துக்கிட்டிருந்தா, இந்தப் பொண்ணு இன்னும் நல்லாப் படிப்பா. பாப்பாரப் பிள்ளைங்களும், மேல் ஜாதிப் பிள்ளைகளும் படிக்கிறதால இந்தப் பிள்ளையைச் சேர்க்க மாட்டேனுட்டான்.

ஓவியா செவ்வந்தியைப் பக்கத்தில அழைத்தாள். நீ எங்கு படிக்கிறாய்?
ஆதிதிராவிட நலப்பள்ளியில் படிக்கிறேன்.

என்ன மார்க் எடுப்ப?

70, 75 மார்க் எடுப்பேன் அக்கா.

இதற்கு முன்னால் இவள் குடும்பத்தில் யாருக்கும் படிப்பு வாசனையே கிடையாது. காலங்காலமாய் கூலிவேலை மட்டுமே பார்த்து வயிற்றுக்கு வஞ்சனை இல்லாமலிருந்தால் போதும் என்றிருப்பவர்கள்.

ஆதிக்க ஜாதிகளின் அதிகாரப் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதுகூட உணராது வேலை செய்ய மட்டுமே பிறப்பு எடுத்திருப்பது போலிருப்பவர்கள்.

அந்தச் சமூகத்திற்குள் இருந்து வந்த பெண் பத்தாம் வகுப்பில் இவ்வளவு மதிப்பெண் எடுக்கிறாள் என்றால், சரியான வாய்ப்புக் கிடைத்தால்...

என்ன ஓவியா யோசிக்கிற!

ஒன்னுமில்லத்தை.

நீ என்ன யோசிக்கிறேன்னு எனக்குத் தெரியும். அத்தை நம்மை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். நீ நினைத்தால் அந்தப் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேற வைக்கலாம் என்று சொன்ன அத்தையிடம்,
ஆனால் அவருக்கு இது தெரிந்தால்?

எப்படித் தெரியும்மா? காலையில் பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டு சாயங்காலம் டியூசன் சென்டருக்குப் போய்ட்டு இரவு ஒன்பது மணிக்குத் தானே வீட்டிற்கு வர்றான். சாயங்காலமா செவ்வந்திய வீட்டிற்கு வரச்சொல்லி இரண்டு மணி நேரம் பாடம் சொல்லிக்கொடு. புத்திசாலிப் பிள்ளை. நல்லாப் படிச்சிக்குவா. நல்ல படிப்புப் படிச்சு முன்னேறிப் போகட்டுமே. இவளாவது அந்தச் சமுதாயத்தை மாத்திக் காட்டட்டுமே.

அத்தையை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

என்னம்மா அப்படிப் பார்க்கிற!

அவர் என்ன சொல்வாரோன்னு...

அந்தப் பெண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கிறது அவனுக்குத் தெரிஞ்சாத்தானம்மா. நான் சொல்ல  மாட்டேன். நீயும் சொல்லாம மறைச்சுடு. நீ நல்ல காரியம்தானே செய்யப் போகிறாய். தவிர, நீ படிச்ச படிப்பு ஏன் யாருக்கும் பயன்படாமல் இருக்கணும். நன்மை பயப்பதாக இருந்தால் ஆண்களுக்குத் தெரியாமல் பெண்கள் சில காரியங்கள் செய்வதுண்டுதானே.

என் கணவனை நான் இழந்து 15 வருடங்களாயிற்று. அப்பயிருந்து எனக்கு முனியம்மாதான் எல்லா வகையிலும் உதவியாயிருந்தா. அவ குழந்தைக்கு ஒரு நல்லது செய்றதுன்னா எனக்கு மகிழ்ச்சிதானம்மா.

சரி அத்தை, செவ்வந்திக்கு நாளையிலயிருந்து சொல்லிக் கொடுக்கிறேன்.

ஏம்மா நாளைக்கு! இன்னைக்கே ஆரம்பி!

ஓவியா சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாள். செவ்வந்தி ஆர்வமாகப் படிக்கத் தொடங்கினாள். மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது எல்லா ஆசிரியர்களுக்கும் வருவதில்லை. எந்த ஆசிரியரின் வகுப்பை மாணவன் ஆவலோடு எதிர்பார்க்கிறானோ அவரே நல்ல ஆசிரியர். அத்தகையவளாக இருந்தாள் ஓவியா. தமிழின் அழகான உச்சரிப்பையும் ஆங்கிலத்தில் இலக்கணம், கணிதத்தில் தேற்றங்களையும் சூத்திரங்களையும் நன்றாகப் புரியும்படியாக அதேநேரத்தில் மறக்காமலிருக்க சில பயிற்சிகளையும் செவ்வந்திக்குச் சொல்லிக் கொடுத்தாள். ஊரில் (பள்ளியில்) பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்ததையெல்லாம் இங்கு ஒரே பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்தாள். இந்த மூன்றுமாத காலத்திற்குள் செவ்வந்தி நன்கு கற்றுத் தேறியிருந்தாள். தேர்வுகள் முடிந்து இரண்டு மாதங்கள் கழிந்தன. குமாரவேலு காலையிலிருந்து தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருந்தான். இன்று எஸ்.எஸ்.எல்.சி முடிவுகள் அறிவிக்கப்படும். தான் சொல்லிக்கொடுத்த பிள்ளைகள்தான் இந்த முறை கண்டிப்பாக அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தான்.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ஒரு மாணவி. அதுவும் திருவாரூர் மாவட்டம் என்று சொல்லும்போது அந்த அரை விநாடிக்குள் தன்னிடம் படித்த ஹேமாவா, பத்மாவா, காயத்ரியா, பங்கஜமா என்று அவன் மனதிற்குள் ஓடியது. ஆனால் ஆதிதிராவிட நலப்பள்ளி மாணவி செவ்வந்தி 498 மதிப்பெண் பெற்றிருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டபோது அவனுடைய மனதிற்கு ஏமாற்றமாய்ப் போய்விட்டது.

ஆதிதிராவிடப் பள்ளியில் படித்த பெண் முதல் இடமா? இவனால் நம்பவே முடியவில்லை. என்னிடம் உள்ள அத்தனை திறமையையும் காட்டிச் சொல்லிக் கொடுத்தேனே, அப்படியிருந்தும் தலைமுறை தலைமுறையாய் படித்த வீட்டுப் பிள்ளைகளைவிட மிகச் சாதாரணமான பெண் மதிப்பெண் வாங்கி விட்டாளே என்று நினைத்து தோல்வியுற்ற மாணவன்போல் மனம் வெதும்பிப் போனான்.

வீட்டு வாசலில் முனியம்மாவின் குரல் கேட்டது. பக்கத்தில் செவ்வந்தி மகிழ்ச்சித் துள்ளலோடு நின்று கொண்டிருந்தாள். குமாரவேலுவின் அம்மாவும், ஓவியாவும் வாசலுக்கு வந்தார்கள். ஓவியாவைப் பார்த்ததும் செவ்வந்தி நன்றியை வெளிப்படுத்த பெருகிய கண்ணீரோடு காலில் விழப் போனாள். அதற்குள் ஓவியா அவளைத் தூக்கி யார் காலிலும் விழக்கூடாது என்பதுதான் சுயமரியாதை. அந்தச் சுயமரியாதை உனக்கு வரச் செய்வதற்கு உதவிதான் இந்தப் படிப்பு. இனி உன்னால் எல்லாவற்றையும் நன்றாகக் கற்க முடியும். இயல்பாக உனக்கு உள்ள மூளைத் திறமையும் கற்ற கல்வியறிவும் உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையும் உண்டுபண்ணும். வருங்காலத்தில் உன் சமுதாய மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கிக் கைகொடுத்துத் தூக்கிவிடு! அதைத்தான் நான் விரும்புகிறேன் என்ற மருமகளை அத்தை பெருமையாகப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

சரியக்கா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று முனியம்மாவை அழைத்துக்கொண்டு போய்விட்டாள். அதுவரையில் வீட்டின் உள்ளேயிருந்து கவனித்துக் கொண்டிருந்த குமாரவேல் முறைத்துக்கொண்டே வெளியில் வந்தான். ஓவியா சற்று பயந்திருந்தாள். ஆனால் அத்தை, என்னடா பார்க்கிறாய்? மாநிலத்தில் முதலிடம் பெற்ற பெண்ணை நினைவுக்கு வருகிறதா? ஆறு மாதங்களுக்கு முன் முனியம்மா மகளுக்கு டியூசன் சொல்லிக்கொடு என்று சொன்னேனே, அந்தப் பெண்ணை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் வெளியில் அனுப்பச் சொன்னாயே, அந்தப் பெண் செவ்வந்திக்கு ஓவியா தான் கற்ற கல்விக்குத் துரோகம் செய்யாமல் கற்றுக் கொடுத்தாள். ஒரு குடும்பம் முன்னேற வேண்டுமானால், அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணுக்குக் கல்வியைக் கொடு என்று சொல்வார்கள். அதைத்தான் என் மருமகளும் செய்தாள். அவள் அப்படிச் செய்தது உனக்குச் செய்த துரோகம் என்றால் அந்தத் துரோகத்தைச் செய்யத் தூண்டியதே நான்தான் என்றார். குமாரவேலு எதுவும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியே போய்விட்டான். மாலை வீட்டிற்குத் திரும்பியவன் கையில் கொண்டுவந்த விண்ணப்பப் படிவத்தை ஓவியாவிடம் நீட்டினான். நாளை நாகமணியம்மை மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நீ வேலைக்குச் சேருகிறாய். படிவத்தைப் பூர்த்தி செய். இனியும் உன் திறமையை வீணாக்க விரும்பவில்லை என்றான் புன்சிரிப்போடு. ஓவியா மகிழ்ச்சி மிகுதியால் அத்தை இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் குமாரவேலுவை அணைத்துக் கொண்டாள். மகனுடைய மாற்றத்தைக் கண்டு சந்தோசப்பட்டு அவர்கள் அணைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து வெட்கப்பட்டு  வெளி வாசலுக்கு வந்தாள். ****படித்ததில் பிடித்தது*************

சித்த மருத்துவக் குறிப்புகள்

*உடல், அசதி உடல் வலி தீர...!*

முரங்கை ஈர்க்கு கஷாயம் சாப்பிட்டு வர உடல் அசதி உடல் வலி தீரும்.

*உடல் அசதி,கை கால் வலி குணமடைய*

முருங்கை ஈர்க்குவை ரசம் வைத்து சாப்பிட்டு வர உடல் அசதி,கை கால் வலி நிற்கும்...!

*உடல் ஆரோக்கியம் பெற கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்கள் குறைய*

உடல் ஆரோக்கியம் விளாப்பழ மரத்தின் பட்டையைக் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்கள் குறையும்.

*உடல் ஆரோக்கியம் பெற,குடல் சுத்தமாக*

உடல் ஆரோக்கியம் வில்வப்பழத்தின் சதைப்பகுதியைச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் குடல் சுத்தமாகும்.

*உடல் ஆரோக்கியம் அதிகரிக்க*

கரிசலாங்கண்ணி இலை மற்றும் பருப்புக்கீரை இரண்டையும் தனித்தனியாக அரைத்து சாறு எடுத்து பிறகு ஒன்றாக கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சோர்வு குறைந்து நோய் வராமல் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

*உடல் ஆரோக்கியம் பெற*

பேரீச்சம் பழம் இரண்டை தினசரி சாப்பிட்டு பின்பு பால் குடித்து வந்தால் குளுக்கோஸ் நேரடியாக கிடைத்து உடல் ஆரோக்கியம் பெறும்.

*உடல் ஆரோக்கியமாக*

உலர்ந்த வல்லாரைக் இலைப்பொடியில் நல்லெண்ணெய் சேர்த்துச் சாதத்துடன் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகும்.

*உடல் ஆரோக்கியம் பெற*

உடல் ஆரோக்கியம் பெற பனம் பழத்தை தொடர்ந்து சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறும். மிகவும் ஊட்டச்சத்து மிக்கது.

*உடல் உஷ்ணம்*

உடல் உஷ்ணம் தணிக்க தினமும் ஆட்டுப்பால் சாப்பிட்டு வர உடல் குளுர்ச்சி பெறும்.

*உடல் உஷ்ணம்*

உடல் உஷ்ணத்தை குறைக்க வெந்தயத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறைந்து விடும்.

*உடல் உஷ்ணம் குறைய*

புளிய மரத்தின் கொழுந்து இலைகளை எடுத்து துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

*உடல் உஷ்ணம் குறைய*

தாமரை இலைகளை எடுத்து நன்கு அரைத்து,இதோடு சந்தனதைக் குழைத்து உடலில் தேய்த்து வந்தால் உடல் எரிச்சல் மற்றும் உடல் உஷ்ணம் குறையும்.

*உடல் சுறுசுறுப்புடன் இருக்க*

வல்லாரைப்பொடியை நெய்யில் கலந்து காலை,மாலை சாப்பிட்டு வர உடல் சுறுசுறுப்புடன் இருக்கும்.

*உடல் சுறுசுறுப்பு அடைய*

சுக்கு பொடியை மதிய வேளையில் சாப்பிட்டு வர உடல் சுறுசுறுப்பு அடையும்.

*உடல் சூடு*

தாமரை இதழ்களை காய்ச்சி, வடிகட்டி, சர்க்கரை அல்லது தேனை கலந்து உண்டு வர கண்கள் குளிர்ச்சியடையும். உடல் சூடு தணியும்.

*உடல் சோம்பல்*

துளசி இலைகளை செம்பு பாத்திரத்தில் இரவு ஊற வைத்து காலையில் அந்த நீரை பருகி வர புத்துணர்ச்சி ஏற்படும்.

*உடல் சோர்வு நீங்க*

தினசரி 2 பேரிச்சை பழம் சாப்பிட்டு பால் அருந்தி வர குளுக்கோஸ் உடலுக்கு கிடைக்கும்.

*உடல் நாற்றம் நீங்க*

உடல் நாற்றம் நீங்க பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம்.

நிம்மதி

நிம்மதி

எதை தேடுகிறாய்
எங்கே தேடுகிறாய்
நீ தேடுவது உன்னிடத்தில்
உள்ளதே.....நிம்மதி

பணத்தின் பின்னால் ஓடி
வாழவே மறந்து....பாசத்தை மறந்து....வேதனையை சுமந்து....ஓடுகிறான் உறவின் பின்னே.....அதில் மிஞ்சியது துரோகம் மட்டுமே!

வாழ்க்கையில் நிம்மதியை கடைசி வரை தேடுகிறான்!

நிம்மதியில் மதியிருந்தும்
பலரும் மதிக்காமலே இருக்கின்றனர் நிம்மதியை!

தேடிக்கொண்டே இருக்கின்றனர்...நிம்மதியை
அனைவருக்கும் நிம்மதி
கிடைத்தால் நிம்மதியே!

உண்மையில் நிம்மதி எங்கும்
காணாமல் போகும் பொருள்
இல்லை. அது நம்முள்ளே
மறைந்துள்ளது.

வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழ்ந்தாலே...கஷ்டங்களும்
நிம்மதியாய் கடந்தே செல்லும்!

அன்பில்,பாசத்தில்,உதவி
செய்வதில்,சோகத்திலும்,
மகிழ்ச்சியிலும்.....இப்படி
அனைத்திலும் கிடைக்கின்றது
நிம்மதி!

இனி நிம்மதியான வாழ்க்கையை...நிம்மதியாய்
வாழ்ந்துக் காட்டுவோம்!
நன்றி

சகோதரி உமாமகேஸ்வரி
இயற்கை மருத்துவ ஆலோசகர்

அறிகுறிகள்

உங்களுக்கு என்ன நோய் ?

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

*கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?*

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

*கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?*

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?*

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?

நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிகர் நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

*தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?*

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

*முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?*

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

*தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?*

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

*டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.*

பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

*பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?*

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

*சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?*

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

*வெளுத்த நகங்கள் என்ன வியாதி?*

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

*விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?*

ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

*நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?*

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

*வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?*

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

*சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?*

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

*வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?*

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...