Ads

ads header

Ad Code

Google adsense

Monday, May 20, 2024

பூமி மீது....

பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. ஏனெனில், பூமிக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும்.

அற்புதமான வரிகள்..மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்..

மலைகளை வெட்டுகிறீர்களா? நன்றாக வெட்டுங்கள். பெருங்கடல்களுக்குக் கீழே உள்ள கண்டத்திட்டுகளை சில அடிகள் நகர்த்திக்கொண்டால், கடலுக்கு மேலே புத்தம் புதிய மலைகள் முளைத்து வந்து விடும். 
இமயமலை கூட பூமியால் அப்படி உருவாக்கப் பட்டதுதான். பெருங்கடலுக்கு அடியே உள்ள கடின நிலத்தை ஓரிரு ஆழிப்பேரலைச் சீற்றங்கள், சில நிலநடுக்கங்கள் வழியாக அப்படியே மேலே கொண்டுவந்துவிடுவது பூமிக்கு எளிதான செயல். இமயமலையின் உச்சியில் இப்போதும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கின்றன.

எரிவாயு எடுக்கிறீர்களா? நன்றாக எடுங்கள். அதற்காக நிலத்தைத் தோண்டி நிலத்தடி நீரை உறிஞ்சித் துப்புகிறீர்களா? நன்றாகத் துப்புங்கள். ஒரே ஒரு நிலப்பிளவு, நிலத்தின் மேல் உள்ள பல கோடி உயிரினங்களை உள்ளே விழுங்கிக் கொள்ளும். அந்த உயிரினங்கள் யாவும் மட்கி, எரிவாயுவாகவும் தங்கமாகவும் வைரமாகவும் நிலக்கரியாகவும் இன்னும் பல விலைமதிப்பற்ற ‘செல்வங்களாகவும்’ பூமியால் மாற்றப்படும்.

காடுகளை அழிக்கிறீர்களா? நன்றாக அழியுங்கள். ஒரே ஒரு பெருமழை, காடுகளை அழித்து உங்களையும் அழித்து நீங்கள் நட்டுவைத்த வண்ணக்கொடிகளையும் கட்டி வைத்தக் கட்டடங்களையும் விழுங்கிச் செரித்துவிடும். ஆகப்பெரிய அரண்மனைகளின் மதில்களில் கூட அரசமரங்கள் முளைத்துக்கிடக்கும்.

பூமி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். அதற்குப் பின்னர், முன்னேற்றம் ,வளர்ச்சி போன்ற சொற்கள் எழுதப்பட்ட புத்தகங்களும் பதாகைகளும் ஏதோ ஒரு கடலுக்கு அடியில் அல்லது ஏதோ ஒரு பனிமலையின் உச்சியில் சிதைந்துகிடக்கும் கழிவுகளாகத்தான் இருக்கும்.

நிறுத்திக்கொள்ளுங்கள்.. பூமியை சீர்குலைக்கும் அனைத்து அழிவு எண்ணங்களையும் திட்டங்களையும் நிறுத்திக்கொள்ளுங்கள்.... 
நிறுத்திவிட்டு நீ உன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்.. 
இல்லாவிடில் பூமி தன்னை காப்பாற்றிக்கொள்ள உன்னை கொல்லும் சூழலை உருவாக்கும்...

நீ எதை பூமிக்கு செய்கிறாயோ அதன் அடிப்படையிலேயே பூமியும் தன்னை தகவமைக்கும்..
உங்கள் வருங்கால சந்ததிகள் மேல் பாசம் இருப்பின் அவர்களின் மீது உண்மையான அன்பு இருப்பின் அவர்களின் கஷ்டத்தை உங்களால் பார்க்க முடியாது என்பது உண்மையெனில் அவர்களுக்காக பூமி மீது இன்றே உங்கள் அன்பை வெளிப்படுத்த துவங்குங்கள்..
நீங்கள் இல்லாவிட்டாலும் உங்கள் அடுத்த தலைமுறைக்கு பூமி தன்னுடைய அளவிலாத அன்பின் மூலமாக சந்தோஷங்களையும் ஆரோக்கியத்தையும் தந்துகொண்டே இருக்கும்..

பரந்த பூமியை பசுமை பூமி ஆக்குவோம்...
அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியத்தை பரிசளிப்போம்..

No comments:

Post a Comment

Powered by Blogger.

Ad

Ad Code

Google Ad