வேப்பிலை

வேப்பிலை
........................................
  வேப்பிலை எனும் 
பூலோக அமிர்தத்தின் பிறப்பை பற்றியும் 
வேறு எந்த மூலிகைக்கும் இல்லாத 
அதன் சிறப்பை பற்றியும் 
அகஸ்தியர் பெருமான் கூறும் விளக்கம்

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய 
இதன் விளைவாக சாகா நிலையை தரும் அமிர்தம் கிடைக்க
இந்த அமிர்தத்தை மகாவிஷ்ணு பெண் ரூபமாய் மாறி 
அழகிய மோகினியாக அவதாரம் தரித்து தேவர்களுக்கு இந்த அமிர்தத்தை பந்தி வைத்து பரிமாற

இதை பார்த்த அசுரர்களில் ஒருவன் அமிர்தத்தை எப்படியும் ருசித்து சாகாவரம் பெற வேண்டும் என விரும்பி தனது மாயா சக்தியால் தேவ ரூபம் தரித்து தேவர்களைப் போல பந்தியில் அமர்ந்திருக்க

தனது ஞான சக்தியால் இதை அறிந்த தேவர்களான சந்திரனும் சூரியனும் இதை மோகினியாய் மாறி பந்தியில் அமிர்தத்தை பரிமாறி வரும் மகாவிஷ்ணுவுக்கு உணர்த்த

இதை புரிந்துகொண்ட பகவான் மகாவிஷ்ணு சுவர்பானு எனும் அரக்கன் தேவரூபம் பெற்று பந்தியில் அமர்ந்திருப்பதை அறிந்து கொள்ள

தான் அசுரன் என்பதை மகாவிஷ்ணு அறிந்து கொண்டார் என்பதை சுவர்பானு உணர்ந்து கொண்டு உடனே அந்த அமிர்தத்தை வாயில் விட்டு விழுங்க

அமிர்தத்தை விழுங்கிவிட்டால் அசுரனுக்கு சாகாவரம் கிடைத்து விடுமே என்ற காரணத்தால் 

அமிர்தத்தை பந்தியில் பரிமாறி வந்த மகாவிஷ்ணு தான் வைத்திருந்த அகப்பையால் அந்த அசுரனின் தலையை வெட்டி விட

அசுரன் வாயிலிட்ட அமிர்தமானது அசுரனின் உடலுக்கு செல்லாமல் வாயிலிருந்து கீழே விழுந்து விட 

அந்த அமிர்தமே வேப்ப மரமாய்  வளர்ந்து பூலோக அமிர்தமாய் பூமியில் இருக்கிறது என்றும்

இந்த வேப்பிலையை எனும் அமிர்தத்தை முறைப்படி உட்கொண்டு வந்தால் பல தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் என்றும் 

சித்தர்களில் முதன்மை சித்தரான அகஸ்தியர் பெருமான்
சாகா வரத்தை தருகின்ற அமிர்தமே வேப்பிலை எனும் திருநாமத்தை பெற்று ஒரு அரிய வகை மூலிகையாக பூமியில் அவதரித்து இருப்பதாக இதன் சிறப்பை அகஸ்தியர் பெருமான் கூறியிருக்கிறார்

வேம்பு எனும் கற்ப மருந்தை உண்ணும் விதமும் அதனால் கிடைக்கின்ற பயனும்

  குறைந்தது நூறு ஆண்டை கடந்த முற்றிய வேப்பமரத்தின்

முதிர்ந்த இலை 
இளம் கொழுந்து இலை 
வேப்பம் பூ 
வேப்பம் பிஞ்சு 
வேப்பங்காய் 
வேப்பம் விதை
வேப்ப மரப்பட்டை

 இவைகளை தனித்தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து அனைத்தையும் சம எடையாக  கலந்துகொண்டு 

இதன் எடைக்கு ஏழில் ஒரு பங்கு  வேப்பம் பழத்தின் பழ ரசத்தைப் சாறாக பிழிந்து இந்த பொடியோடு கலந்து நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்து இதை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு

 உப்பு புளி காரத்தை தவிர்த்து பத்தியம் காத்து வேப்ப மரத்தின் அட்டங்க பொடியை சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் நோய்களும் தீரும்
 
வேம்பு கற்பத்தை முறையாக ஒரு மண்டலம் உட்கொண்டு வந்தால்

வண்டுகடி வாதவலி கணுச்சூலை எனும் மூட்டுவலி சன்னி சொறி சிரங்கு குஷ்டம் கைகால் முடக்கு சீத சன்னி தனுர்வாதம் பச்சை வாதம் பாரிசவாதம்சூலை விப்புருதி கட்டி வீக்கம் இவைகளோடு தீராத மேகம் வெள்ளை நோய் உடல் அரிப்பு தடிப்பு ஊரல் இவைகள் தீரும் மேலும் கடுமையான இருமல் விலகும்

நமது உடலானது இறுகி கற்தூனை  போல வலிமை பெறும் நாடி நரம்புகள் முறுக்கேறி சரீரத்தில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கும் முகத்திற்கு அழகு உண்டாகும்

வேப்ப மரத்தின் 
மருத்துவ பயன்களில் சில

முகத்திற்கு அழகு சேர்க்க

  ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் முகம் கழுவி வர முகத்தில் தோன்றிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும் முகமது கண்ணாடி போல் மின்னும் பார்ப்பதற்கு முகம் முன்பு இருந்ததை விட இப்பொழுது  அழகாக தோன்றும்

வயிற்று புழு நீங்க

 வேப்பம் கொழுந்தை மைபோல் அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் உட்கொண்டு வர வயிற்றில் உள்ள புழுக்கள் இறந்து வெளியேறிவிடும்இதனால் வாய்வு தொல்லை நீங்கும் வயிற்று உப்பிசம் குறையும்

புண்கள் ஆற

வேப்பம் கொழுந்து மஞ்சள் கிழங்கை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்து புண்கள் மீது தடவி வர சீக்கிரம் புண்கள் ஆறிவிடும் சேற்றுப் புண்கள் மீது பூச சேற்றுப்புண்கள் ஆறிவிடும்

அக்கி புண் குணமாக

  வேப்பிலை நெல்லிக்காய் இரண்டையும் மை போல அரைத்து அக்கி புண் மற்றும் அரிப்பு காயங்கள் உள்ள இடங்களில் தடவ இவை அனைத்தும் குணமாகும்

கண் வலி நீங்க
  
வேப்பிலையோடு சமமாக தோல் நீக்கிய சுக்கை சேர்த்து இதன் எடைக்கு நான்கில் ஒரு பங்கு இந்துப்பை கலந்து இதை அடுப்பிலிட்டு லேசாக சூடாக்கி வெதுவெதுப்பாக இருக்கின்ற பொழுது கண்களில் வைத்து கட்டி வர கண் வலி கண் அரிப்பு நீங்கும்

அஜீரண பேதி குணமாக

  ஒரு கைப்பிடி அளவு முதிர்ந்த வேப்பிலையை எடுத்து மண்பானையிலிட்டு நன்கு கருகும்படி வறுத்து தூள் செய்து இதில் மூன்று கிராம் எடுத்து சுட்டு பொடித்த வசம்பு தூளை இதன் எடைக்கு பாதி சேர்த்து இதை மோரில் கலக்கி குடித்துவர அஜீரணக் கோளாறால் ஏற்பட்ட அடிக்கடி பேதியாவது குணமாகும்

அம்மை நோய் நீங்க

  வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டையும் சமமாக எடுத்து நன்கு அரைத்து அம்மைப் புண் மீது பூசி வர புண்கள் ஆறிவிடும்

 வேப்பிலையும் மஞ்சளையும் அரைத்து ஒரு ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து இதை அடுப்பில் வைத்து பாதியாகச் சுண்டக் காய்ச்சி காலை மாலை இருவேளையும் அருந்தி வர அம்மை நோய் குணமாகும்

என்றும் ஆரோக்கியமாய் வாழ

   கால் லிட்டர் தண்ணீரை முதல் நாள் இரவு நன்கு கொதிக்கவைத்து அதில் பதினைந்து வேப்பம் பூக்களை போட்டு மூடி வைத்திருந்து காலையில் இந்த நீரை வடிகட்டி குடித்துவர உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமும் அதிக பலமும் உண்டாகும்

தோல் நோய்கள் நீங்க

  வேப்பமரத்து உள் பட்டையை காயவைத்து இடித்து இதன் எடைக்கு சமமாக கடுக்காய்த் தூளை சேர்த்து இதில் மூன்று கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் இருவேளை முப்பது நாட்கள் சாப்பிட்டு வர தோல் நோய்கள் அனைத்தும் நீங்கும் கொடிய குஷ்ட நோயும் இதனால் குணமாகும்

பல்வலி குணமாக

  வேப்ப மரத்தின் வேரை இடித்து ஒரு கைப்பிடி எடுத்துக்கொண்டு  ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இதை பாதியாக சுண்ட காய்ச்சி இந்த நீரால் வாய் கொப்பளித்து வர பல்வலி குணமாகும் வாய் துர்நாற்றம் அகலும்

வயிறு சுத்தமாக 
குடல் நோய்கள் அனைத்தும் குணமாக

  வேப்பெண்ணெய் விளக்கெண்ணெய் இரண்டையும் சம அளவாக கலந்து வைத்துக் கொண்டு மாதம் இருமுறை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை காலைவேளையில் இந்த எண்ணெயில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சாப்பிட்டு வர மலக்குடலில் உள்ள பூச்சிகள் இருந்து மலத்துடன் வெளியேறும் வயிறு சார்ந்த நோய்கள் அனைத்தும் தீரும் குறிப்பாக வாய்வுத் தொல்லை வயிற்று உப்பிசம் அஜீரணக் கோளாறுகள் அனைத்தும் விலகும்

பாத வெடிப்பு நீங்க

 இரவு வேளையில் கால் பாதத்திற்கு வேப்பெண்ணை தடவி வர பித்தத்தால் காலில் ஏற்படும் பித்த வெடிப்புகள் முழுமையாக நீங்கிவிடும்

தலைவலி நீங்க 
வேப்பம்பூ வைத்தியம்

நன்கு கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி காது வலி குணமாகும் 

நீராவியை வாய்வழியாக உள்ளிழுத்து வெளியே விட வரட்டு இருமல் தொண்டைப்புண் தொண்டை வலி நீங்கும்

குளிர் சுரம் குணமாக

  முதிர்ந்த வேப்பமரத்து பட்டையை கொண்டுவந்து மேற்புற நீயே நீக்கிவிட்டு உள்புறத்தில் உள்ள பட்டையை நிழலில் உலர்த்தி இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் வெந்நீரில் கலந்து குடித்து வர குளிர் காய்ச்சல் குணமாகும்

வயிற்றுவலி குணமாக

வேப்பிலையோடு சீரகத்தை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து  கால் லிட்டர் தண்ணீரில் கலந்து இதை வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுவலி குணமாகும்

சர்க்கரை நோயை சமப்படுத்த
             வேப்பிலை வைத்தியம்

ஓமம் சுக்கு வேப்பில்லை பனைவெல்லம் இவைகளை சம அளவாகக் பொடி செய்து ஒன்றாக கலந்து கொண்டு இரவு சாப்பாட்டிற்கு பின்பு இந்தப் பொடியில் ஐந்து கிராம் எடுத்து சாப்பிட்டுவிட்டு அதன் பின் பால் அருந்திவர படிப்படியாக சர்க்கரை நோய் குறைந்து சர்க்கரையின் அளவு சமநிலைக்கு வந்துவிடும் 

நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக

  வேப்ப மரத்தின் கொழுந்து இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு இதை தினந்தோறும் காலை வேளையில் மூன்று கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர உடலில் உள்ள கடி விஷங்கள் அனைத்தும் நீங்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோயின்றி வாழ இது ஒரு எளிய வழி முறையாகும்

My Daddy is....

♥தயவு செய்து பொறுமையாக படியுங்கள்♥

♥ என்னுடைய கைபேசி அலறியது. அழைப்பது என் அக்கா என்பதை உணர்ந்து, எடுத்து "ஹலோ அக்கா..." என்றேன். "ஹாய் டி அமுதா... இன்னைக்கு அப்பாட பர்த் டே. அப்பாக்கு விஷ் பண்ணுன்னு ஞாபகம் படுத்த தான் கால் செய்தேன்... நான் கிளினிக் கிளம்பனும் அப்புறம் பேசுறேன்..." எப்போதும் போல் தந்தி பாஷையில் பேசி விட்டு அழைப்பை கட் செய்து வைத்தாள் என் அக்கா.

♥இன்று தந்தையின் பிறந்ததினம் என்பது எனக்கு நினைவே இல்லை தான். அப்பாவை போனில் அழைத்து வாழ்த்த வேண்டும். அப்பாவின் நினைவு வந்த உடன், மனதில் தானாக ஒரு வித சந்தோஷம் தோன்றியது...

♥என்னுடைய அப்பாவின் பெயர் கண்ணன். என் பெற்றோரின் சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால் நானும் என் அக்காவும், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். என் அப்பாவிற்கு நிலையான அரசு உத்தியோகம் தான்.

♥என்னுடைய அப்பா முகத்தில் எப்போதும் சிறிது கடுமை இருக்கும். அவர் சிரித்து பேசி நான் பார்த்ததே இல்லை. அவரின் நினைவு வந்தாலே எப்போதும் அதனுடன் நினைவு வரும் அவருடைய அறிவுரை, "நல்லா படி..." என்பது தான்.

♥எங்கள் வீட்டில் பொதுவாக எல்லா முடிவுகளையும் எடுப்பது என் தந்தை தான். மற்றவர்களுக்கு அதை கேட்கும் உரிமை மட்டும் உண்டு ஆனால் மறுத்து பேசும் உரிமையோ, கேள்வி கேட்கும் உரிமையோ இல்லை. யாருடன் விளையாடுவது என்பதில் தொடங்கி என்ன விளையாடுவது என்பது வரை என் தந்தையின் தலையீடல் இருக்கும்.

♥ஆனால் எங்கள் வீட்டின் செல்ல பிள்ளையான என்னால் மற்ற இருவரையும் போல் கேள்வி கேட்காது இருக்க முடியாது. பல முறை அப்படி கேள்வி கேட்டும், மறுத்து பேசியும் வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறேன். அப்படி திட்டு வாங்கி நான் அழும் போதெல்லாம், என் அம்மா என்னை சமாதான படுத்துவது,
"அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றார்... சும்மா கேட்டால் என்ன?" என்பது தான்.

♥என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது எப்படி எனக்காக அவர் முடிவு செய்வது என என் மனம் சண்டி தனம் செய்யும். என்னுடைய அக்கா என்னை போல் இல்லை. அவள் எதற்கும் அடம் பிடித்தோ அழுதோ நான் பார்த்ததில்லை. பள்ளி சுற்றுலாக்களுக்கு செல்ல வேண்டும் என்று கூட எனக்கு தெரிந்து அவள் கேட்டது இல்லை. அவளுடைய கவனம், ஆர்வம் எல்லாம் படிப்பில் தான் இருந்தது.

♥ அவளுக்கும் என் அப்பாவின் விருப்பம் போல் படித்து மருத்துவராக வேண்டும் என்ற ஆசை. ஒவ்வொரு வருடமும் லட்சக் கணக்கில் கட்டணம் செலுத்தி படிப்பது என்பதெல்லாம் நடக்க கூடிய விஷயம் இல்லை என்பதால் எப்படியாவது தன் கல்வி தகுதியை கொண்டே மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்பது அவளின் ஆசை, அது தான் என் அப்பாவின் கனவும் கூட....

♥ஆனால் நான் அவளுக்கு நேர் எதிர்...... ஐந்தாவது படிக்கும் போது, தீபாவளிக்கு அறுநூறு ரூபாய்க்கு கடையில் வைத்திருந்த உடை தான் வேண்டும் என்று நான் அழுது ஆர்பாட்டம் செய்தது இன்னும் நினைவிருக்கிறது!

♥அன்றைய காலக் கட்டத்தில், ஒருவர் சம்பாத்தியத்தில் ஓடும் நடுத்தர குடும்பத்தில் அறுநூறு ரூபாய்க்கு துணி எடுத்து தீபாவளி கொண்டாடுவது என்பது ரொம்பவே அளவுக்கு மீறிய ஆசை என்பது எனக்கு அப்போது விளங்க வில்லை. ஏன் திடீரென மாத இறுதி நேரத்தில் பள்ளியில் ஏற்பாடு செய்திருக்கும் சுற்றுலாவிற்கு சென்றே தீருவேன் என்று நான் அடம் பிடித்து அழும் போது, என் அப்பாவின் முகத்தில் தோன்றும் அந்த திகைப்பை புரிந்துக் கொள்ளும் அறிவும் எனக்கு இருந்ததில்லை...

♥இப்படியாக நாட்கள் செல்ல, என்னுடைய அக்கா பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 90% மதிப்பெண் பெற்றாள். நுழைவு தேர்வு முடிவுகளும் வந்து மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் பட்டியல் வெளியானது. எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக என் அக்காவிற்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் இரண்டாவதாக இருந்த அவளுக்கு 2 மதிப்பெண் வித்தியாசத்தில் இடம் கிடைக்க வில்லை. மனதிற்கு வருத்தமாகவே இருந்தது.

♥பத்தாம் வகுப்பு தேர்வெழுதி, முடிவுகளுக்காக காத்திருந்த நான், அன்று அதி காலையில் ஏதோ பேச்சு சத்தம் கேட்டு கண் விழித்தேன். என் அப்பா தான் என் அக்காவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
"... பணம் கொடுத்து எல்லாம் டாக்டர் சீட் வாங்குற நிலைமையில் நாம இல்லை... என்னம்மா செய்றது... பி.டி.எஸ் சீட் கட்டாயம் கிடைக்கும் அதையே பார்ப்போமா?" மெலிதாக ஒலித்த என் அப்பாவின் குரலில் நான் திடுக்கிட்டு போனேன். எப்போதும் கம்பீரமாக ஒலிக்கும் அந்த குரலில் இருந்த மாற்றம் மட்டும் அல்லாது, அதில் இழையோடிய வருத்தம் முதல் முறையாக என் தந்தையை என்னை புதிய பரிமாணத்தில் பார்க்க வைத்தது.

♥விஷயம் அறிந்த என் இரண்டு பெரியப்பாக்களும், "அவங்க ரெண்டு பேரோட கல்யாணத்திற்கு காசு பணம் சேர்த்து வைக்காமல், ஏன்டா இப்படி படிப்புக்குன்னு செலவு செய்ற?" என்று ஒரே கோரஸில் சொல்லவும், எங்கே என் தந்தை அவர்களின் பேச்சை கேட்டு அக்காவை கலங்க வைத்து விடுவாரோ என்று ஒரு வினாடி கலங்கினேன். ஆனால் என் தந்தை,

♥"கல்யாணத்துக்கு இன்னும் காலம் இருக்கே... இப்போ படிக்கட்டும்..." என்று சுருக்கமாக முடிக்கவும் தான், எனக்கு நிம்மதி வந்தது.

♥என் அக்கா பல் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்தாள். மற்றபடி எங்கள் வீட்டில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. எப்போதும் கண்டிப்பாக இருக்கும் என் தந்தையின் பேச்சு எனக்கு எப்போதும் போல் அலுப்பாக தான் இருந்தது.

♥"இந்த வீட்டில் இருக்கவே எனக்கு பிடிக்க வில்லை... எல்லோருக்கும் எவ்வளவு அன்பா பேசுற அப்பா இருக்காங்க...ச்சே.... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் இந்த வீட்டை விட்டு போக போறேன்... அப்போ தான் எனக்கு நிம்மதி...." இது அவ்வப்போது என் அப்பாவிடம் எதற்காவது திட்டு வாங்கி கொண்டு நான் சொல்லும் என்னுடைய வழக்கமான வசனம்.

♥நாட்கள் ஓடின, நானும் என் பள்ளி படிப்பை முடித்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். தனியார் கல்லூரி என்ற போதும், அரசின் ப்ரீ சீட் எனப்படும் திட்டத்தில் எனக்கு இடம் கிடைத்திருந்தது. தினமும் வீட்டில் இருந்து காலையிலும் மாலையிலும் இரண்டு மணி நேர பேருந்து பயணம்.

♥இரண்டு பேர் ஒரே நேரத்தில் தொழில் வல்லுநர் படிப்பு பயிலும் போது, செலவு அதிகமாவது இயல்பு தான். என் அக்காவின் படிப்பிற்கு புத்தகம் மட்டும் அல்லாது, பயிற்சிக்கு மருத்துவ கருவிகளும் வாங்க வேண்டி இருந்தது. என்னுடைய புத்தகத்தின் விலையும் யானை விலை தான்! ஆனால் என் தந்தை மனம் கலங்க வில்லை எப்படியோ பாடுபட்டு பணம் புரட்டி எங்களுக்கு வேண்டிய பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டார். இந்த நேரத்தில் என் தந்தையை பார்த்து பல முறை பிரமித்திருக்கிறேன்...

♥அவர் சற்று கடுமையும் கண்டிப்புமாக நடந்துக் கொண்டாலும் கூட, நாங்கள் கேட்டு எதையும் இல்லை என்றே சொன்னதில்லை... சிறு வயதில் நான் கேட்ட ஆறு நூறு ரூபாய் உடையையும் சேர்த்து தான்... எனக்கு தெரிந்து எந்த ஒரு பண்டிகைக்கும் எங்கள் மூவருக்கும் ஆடைகள் வாங்குவாரே தவிர அவருக்கென்று அவர் எதுவும் வாங்கியதாக கூட எனக்கு நினைவு இல்லை...

♥அவரின் கண்டிப்பை மட்டும் பார்த்த நான், அவர் எங்களுக்காக செய்திருக்கும் எத்தனையோ விஷயங்களை அது வரை கவனிக்கவில்லை என்பது புரிந்தது... கடுமையும் கண்டிப்புமாக நடந்த போதும் அவர் ஒருமுறை கூட எதற்கும் கையை ஓங்கியது கூட இல்லை என்பது நினைவில் வந்தது...

♥என் தந்தையின் மீது எனக்கிருந்த தவறான எண்ணங்களை நினைத்து வருந்தினேன்... முடிந்த அளவில் வட்டிக்கு கடன் வாங்காது, சீட்டு கட்டியோ, அலுவலக லோன் மூலமோ அவர் எங்களின் படிப்பு செலவை சமாளிப்பதை பார்த்து பெருமை பட்டேன்...

♥அன்று எங்கள் வீட்டின் அருகில் இருந்த செல்வியின் அம்மா வந்திருந்தார்கள்... செல்வி என்னை விட ஒரு வருடம் மூத்தவள்.. செல்வியின் அம்மாவும் என்னுடைய அம்மாவும் சிநேகிதிகள்... அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது இருவரும் சந்தித்து ஊர் கதைகள் பேசுவார்கள்... அவர்கள் பேசும் ஊர் கதையை தெரிந்துக் கொள்ள எனக்கும் ஆர்வம் உண்டு... அன்றும் ஏதோ செய்த படி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்...

♥"நல்லா படிக்குற பொண்ணு தானே... கொஞ்சம் செலவு செய்தாலும் அவளுக்கு பிடிச்ச படிப்பை படிக்க வைக்க வேண்டியது தானேன்னு சொன்னால், அவங்க சொல்றாங்க, வேற வீட்டுக்கு போய் சம்பாதிச்சு கொடுக்க போற பொண்ணுக்கு போய் நாம ஏன் இவ்வளவு செலவு செய்யனும்னு... எப்படி எல்லாம் இருக்காங்க பார்...."

♥நான் கேட்ட விஷயம் என்னை திகைக்க வைத்தது. அவர்கள் பேசும் குடும்பத்தை எனக்கும் தெரியும். எங்களை விட வசதி படைத்தவர்கள் தான். இப்படியும் கூட பெற்றோர் இன்னமும் இருக்கீறார்களா என்ன? என்னுடைய பெற்றோர் போல் எல்லோருக்கும் இல்லையே என்று வருத்தப் பட்டேன்... எனக்கு நல்ல பெற்றோரை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி கொண்டேன்...

♥என் தந்தை எப்போதும் சொல்வது போல் பாடத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.. கல்லூரி படிப்பு முடித்த போது, என் துறையில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக எனக்கு தங்க பதக்கம் வழங்கினார்கள்... அது புகைப்படமாக நாளிதழ்களிலும் வந்தது... என் தந்தையின் முகத்தில் இருந்த பெருமிதம் கலந்த மகிழ்ச்சியை கண்டு நான் உள்ளம் மகிழ்ந்தேன்... ஒரு நாளுக்கு நான்கு மணி நேரம் பயணம் செய்யும் உன்னால் எப்படி பாடத்தில் கவனம் செலுத்த முடிந்தது என்று கேட்ட என் தோழிகளிடம்,
"எல்லாம் என்னுடைய அப்பாவால்..." என்று பெருமையோடு பதில் சொன்னேன்.

♥மாதம் கைநிறைய சம்பளம் கிடைக்கும் பணியில் நான் சேர்ந்த பின், முதல் சம்பளத்தில், என் பெற்றோருக்கு விலை உயர்ந்த ஆடைகள் வாங்கி தந்தேன்... என் அம்மாவிற்கு மிக்க மகிழ்ச்சி என்றால் என் தந்தை முகத்தில் எந்த மாற்றமும் இல்லை... எப்போதும் போல் கடுமையாகவே இருந்தது...
"இந்த மாதிரி எல்லாம் தேவை இல்லாமல் வாங்கி பணத்தை செலவு செய்யாதே...." என்றார் வழக்கமான கண்டிக்கும் குரலில்.

♥சுள்ளென்று தைத்தன அவரின் வார்த்தைகள். மனதில் வருத்தம் தோன்றியது. இரண்டு நாட்கள் கழித்து என் தந்தையின் சிநேகிதரை வழியில் பார்த்த போது, "என்னம்மா அமுதா... உங்க அம்மா அப்பாவுக்கு டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்த போல இருக்கு... கண்ணன் சொல்லி ரொம்ப சந்தோஷப் பட்டான்.... நீ வாங்கி கொடுத்ததுன்னு சொல்லும் போது அவன் முகத்தில பெருமைய பார்க்கனுமே....." என்று அவர் சொன்னபோது, சட்டென்று எனக்கு ஒரு உண்மை விளங்கியது...

♥ என் தந்தை ஒன்றும் ஆசை இல்லாத கல் இல்லை... அவருக்கும் மனதில் ஆசைகள் இருக்கின்றன... ஆனால் எங்களுக்காக.... அவருடைய பிள்ளைகளுக்காக அவர் அதை எல்லாம் விட்டு விலகி வாழ்கிறார்.... அவருக்கு தன் அன்பை வெளியில் காட்ட தெரியவில்லை.. என் மனதில் அப்பாவின் மீதிருந்த பாசம் பன்மடங்காக பெருகியது!

♥நானும் என் அக்காவுமாக சேர்ந்து என் பெற்றோருக்கு பிடித்த மாருதி கார் வாங்கி தந்தோம்... வழக்கம் போல் என் தந்தையின் கண்டிப்பான பேச்சு என்னை இந்த முறை வருத்தவில்லை.

♥பின்னர் என்ன? நாட்கள் ஓடின... அக்காவிற்கு திருமணம் ஆனது... அப்பா கட்டியிருந்த சீட்டு பணத்தின் மூலம் பெரிய பிரச்சனை ஏதும் இல்லாது அவளின் திருமணம் நடந்தது... பின் எனக்கும் திருமணம் ஆனது... என் கணவரின் அனுமதியோடு மாதம் ஒரு சிறு தொகையை அப்பாவின் வங்கி கணக்கில் போடுவதை வழக்கம் ஆக்கி கொண்டேன்... கையில் கொடுத்தால் அவர் வாங்க மாட்டார் என்பது எனக்கு தெரியும்.

♥என் மகளின் முதல் பிறந்த நாள் விழாவின் போது, அப்பா என் கையில் ஒரு அட்டையை வைத்தார், என்ன என்று வியப்புடன் பார்த்த என்னிடம்,"நீ ஒவ்வொரு மாசமும் போடுற பணத்துல உன் மகள் பேர்ல போஸ்ட் ஆபிசில ரெக்கரிங் டெபாசிட் ஒன்னு கட்டிட்டு இருக்கேன்... இந்த கார்டு உன்கிட்ட இருக்கட்டும்...." என்றார்.

♥பிரமித்து போனேன்... இவரால் எப்படி எப்போதும் பிள்ளைகளுக்காகவே வாழ முடிகிறது?

♥அவர் எங்களுடன் என் அம்மாவை போல் சிரித்து பேசாது இருக்கலாம்... ஒரு நண்பனாக பழகாமல் இருக்கலாம்... ஆனால், ஒரு பேச்சுக்கு கூட பெண் என்றோ மகள் தானே என்றோ பாகுபாடு சிறிதும் பாராது, வியர்வை சிந்த உழைத்து, எங்கள் இருவரையும் சொந்த காலில் நிற்க வைக்கும் கல்வி தந்து, ஒரு நல்ல வாழ்வும் அமைத்து தந்து... இப்படி எங்களுக்கு எல்லாம் செய்த அவருக்கு நாங்கள் இருவரும் என்ன கைமாறு செய்ய முடியும்? இந்த ஜென்மத்தில் செய்யக் கூடியது எதுவும் இல்லை.....

♥♥மனதில் சொல்லிக் கொண்டேன்... "My daddy is the best ...."

♥♥மனதை அழுத்திய சிந்தனையில் இருந்து விடு பட்டு, கையில் இருந்த கைபேசியை எடுத்து தட்டினேன், என் அப்பாவை அழைத்து பிறந்த தின வாழ்த்து தெரிவிக்க!

குல தெய்வம் தெரியாதவர்களுக்கு

குலதெய்வம் தெரியாதவர்கள்  கண்டுபிடிக்க பூசை முறை

எளிமையான, அனுபவப்பூர்வமான வழிமுறை

1.நீங்கள் வாழக்கூடிய ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று விநாயகர், ஒன்பது கோள்கள், பலிபீடம், கொடிமரம், நந்தி தேவர் இவர்களுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வணங்கவும்.

2. சிவபெருமானுக்கு அவர் பெயருக்கே ஒரு அர்ச்சனை செய்யவும். பூசை செய்கின்ற குருக்களிடம் 11 ரூபாய் பணத்தை கொடுத்து சிவபெருமான் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள்.

3. " ஐயா சிவபெருமானே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்ற்றர் என்பதும் தெரியவில்லை. என் சார்பிலும் என் வம்சாவளியின் சார்பிலும் இந்தக் கோரிக்கையையும், காணிக்கையையும் பெற்றுக்கொண்டு என் குலதெய்வம் என் வீட்டிற்கு வரவும், எங்களுக்கு அருளாசிகள் வழங்கவும், எங்களை காத்துக் கொள்ளவும் அருளிடுக" என்று மனமுருகி வேண்டிக் கொள்க.

4. உங்கள் ஊரில் நல்ல செயல்பாட்டில் உள்ள முனீசுவரர், அய்யனார், கருப்பு சாமி கோவிலுக்குச் சென்று அவர்களையும் மேற்சொன்னது போலவே வணங்க வேண்டும்.

5. உங்கள் ஊரில் உள்ள ஊர்த்தெய்வமாக இருக்கும் (ஊர்த்திருவிழா நடைபெறும் கோவிலில் உள்ள) தெய்வத்தையும் மேற்சொன்ன முறையில் வணங்க வேண்டும்.

6. உங்கள் வீட்டில்  இருக்கும் எந்திரங்கள், தகடுகள், தாயத்துகள், எலுமிச்சை பழம், மை... போன்ற எந்த ஒரு பொருள் இருந்தாலும் அதை எல்லாம் அகற்றி எரித்து விடவும்.

7. அருவி நீர், ஊற்று நீர், கோவில் கிணற்று நீர் போன்ற ஏதாவது புனித தீர்த்தத்தை கொண்டு வீட்டை சுத்தம் செய்யவும்

8. குங்கிலியம், நாய்க்கடுகு, வெண்கடுகு, மருதாணி விதை, மிளகு முதலியவைகளை அரைத்து செய்யப்பட்ட சாம்பிராணி புகை காட்டவும்.

9. வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து அழகான கோலம் போடவும். வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி நிலையின் இருபுறமும் வைக்க வேண்டும்.

10. அன்றைய இரவு ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கை சுத்தமான நல்லெண்ணெய், பசுவின் நெய் கொண்டு நிரப்பி, 5 திரிகள் இட்டு அலங்கரித்து வைக்கவும். குத்து விளக்கின் இருபுறமும் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி வைக்க வேண்டும்.

11. குத்து விளக்கின் முன்புறம் ஒரு தலைவாழை இலையில் நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை படையலாக இடவும். 

12. வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். இந்த வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு தடவி வைக்கவும்

13. இலையில் 2 லட்டுகள் வைக்கவும், ஒரு சொம்பில் மஞ்சள் நீர், ஒரு சொம்பில் பானக்கம், ஒரு சொம்பில் பால், ஒரு சொம்பில் குடிநீர் வைக்கவும்.

14. இரவு மீண்டும் குளித்துவிட்டு மஞ்சள், முழுமையும் சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை என்பதில் ஏதேனும் ஒரு வண்ணத்தில் உடையை அணிந்து கொள்ளவும். கறுப்பு கூடவேகூடாது. விபூதி, மஞ்சள், குங்குமம், நெற்றியில் முறைப்படி பூசிக்கொள்ள வேண்டும்.

15. பெண்களும் இதுபோல் தயாரான பின்பு கையில் ஆரத்தி தட்டு எடுத்துக் கொண்டு வாசலுக்கு செல்ல வேண்டும். ஆண்கள் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி, வாசலில் வாசலின் வெளிப்புறத்தை நோக்கியவாறு நின்று கொண்டு " எங்களுடைய குலதெய்வம் எங்கிருந்தாலும், எங்கள் மீது ஏதேனும் குற்றம் குறை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொண்டு, அனைத்து கட்டுக்களையும் அறுத்துக் கொண்டு, எழுச்சி பெற்று, எங்களையும் எங்கள் வம்சாவழிகளையும் காக்க எழுந்தருள்க" என்று சொல்லி பழத்தை பிழிந்து விடவும்.

16. வாசலின் முன் புறத்தில் மூன்று சூடங்களை ஏற்றி "எல்லோரும் வருக" என்று சொல்லி ஆரத்தி, கற்பூர தீபம் காட்டவும். அப்படியே சூடத்தட்டோடு குத்து விளக்கின் முன்பாகச் சென்று அமர்ந்து குத்து விளக்கை ஏற்றவும்.

17. கருப்பர்களில் மூத்தவரான பதினெட்டாம்படிக் கருப்பரை மனதில் நினைத்துக் கொள்ளவும். அவரையே குருவாக நினைத்து கீழ்க்கண்ட குரு வாசகத்தை 24 நிமிடங்கள் மனமுருகச் சொல்லுங்கள்.

ஓம் குரு வாழ்க; ஓம் குருவே துணை; ஓம் குருவே எல்லாம்;
ஓம் குருவே அனைத்தும்; ஓம் குருவே சரணம்.

"தாத்தா பதினெட்டாம்படிக் கருப்பர் அவர்களே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்றார் என்பதும் தெரியவில்லை. நீங்களே என் குலத்திற்குரிய தெய்வத்தை இந்தப் பூசையின் மூலமாக வலிமை பெற்று, வளம் பெற்று, புத்துயிர் பெற்று, மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரச் செய்து அருளாட்சி செய்யச் செய்திடல் வேண்டும்.

என் சார்பிலும் என் வம்சாவழியின் சார்பிலும் இந்தக் கோரிக்கையை பெற்றுக்கொண்டு என் குலதெய்வம் என் வீட்டிற்கு வரவும், எங்களுக்கு அருளாசிகள் வழங்கவும், எங்களை காத்துக் கொள்ளவும் அருளிடுக"

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...