ஈக்கீகய்

உங்களுக்கு பொறுமை இருந்து முழுவதும் படித்தால். *நிச்சய சந்தோஷம் பெற உதவும் பதிவு இது.*

நான் எல்லாம் எப்போவுமே ஈக்கீகய் தான்!

ஈக்கீகய்!

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, அமெரிக்க ராணுவம் ஜப்பானின் பல பகுதிகளிலும் முகாமிட்டிருந்தது. அப்படி அவர்கள் தங்கியிருந்த ஒரு பகுதி ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் இருந்த ஒக்கினாவா என்கிற சிறிய தீவு. இந்தத் தீவில் கூடாரம் போட்டிருந்த அமெரிக்கர்களுக்கு அங்கே ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. 

தீவில் வசித்த பல முதியவர்களுக்கு வயது நூறுக்கும் மேல். யாரைக் கேட்டாலும் எனக்கும் வயது 105, 108, 110 என்று சொல்ல ராணுவத்தினர் மிரண்டு போனார்கள். விசாரணையில் இறங்கினார்கள். தீவில் இருக்கிற எல்லோருக்குமே இயற்கையிலேயே (longevity) வாழ்நாள் அதிகமாக இருப்பதைக் கண்டு பிடிக்கிறார்கள். 

நூறாண்டுகள் வாழ்வதெல்லாம் எங்களுக்குச் சாதாரணம் என்று எல்லோருமே சின்னக் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி புன்னகையோடு சொல்ல அமெரிக்கர்களுக்கு மண்டை காய்ந்து விட்டது. இந்த நீடித்த ஆயுளுக்குப் பின்னால் என்னமோ மர்மம் இருக்கிறது என்கிற தேடல் நெஞ்சை அரிக்கிறது. எதாவது ரகசிய மூலிகை மருந்துகள் பயன்படுத்துகிறார்களா எனத் தேடுகிறார்கள். அவர்களுடைய தேடலின் இறுதியில் கண்டடைந்த விஷயம் தான் IKIGAI - ஈக்கீகய்! 

நம் எல்லாருக்குமே நீண்ட நெடுங்காலம் உயிர் வாழும் ஆர்வம் இருக்கிறது. அந்த ஆயுட்காலத்தை மகிழ்ச்சியோடு கழிப்பது தான் நம்முடைய லட்சியமாகவும் இருக்கிறது. அந்த உயரிய லட்சியத்தை சாவதற்குள் நிறைவேற்றி விட வேண்டும் என்று தானே நாம் ஒவ்வொரு நாளும் உழைக்கிறோம். ஆனால் பாருங்கள் இந்த மகிழ்ச்சிக்கான மாரத்தான் ஓட்டத்தில், அன்பானவர்களோடு செலவழிக்கப் போதிய நேரமில்லை, புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ள அவகாசமில்லை, நம்முடைய தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்துக் கொள்வதைப் பற்றி கவலையில்லை, நமக்கும் படைப்பாற்றல் இருக்கிறது என்பதைக் கூட மறந்து விட்டோம்... எந்நேரமும் வேலையும் பணம் சார்ந்த சிந்தனையுமாகவே வாழ்வின் ஆற்றல் மிகுந்த நாற்பதாண்டுகளைக் கழிக்கிறோம். 

நாம் என்ன தான் திட்டமிட்டாலும், முதுமை நாம் திட்டமிடுவதை போல் அமைந்து விடுவதில்லை. தனி வாழ்வின் எல்லையில் உடற்சோர்வும், தள்ளாடும் நடுக்கங்களும், தீராத நோய்களும், வாதையுமே நமக்கெனக் காத்திருக்கின்றன. மூட்டுவலியில் தொடங்கி, நீரிழிவு, ரத்த அழுத்தம் என நோய்களில் தான் முதுமை கழிகிறது. பணமிருந்தாலும் அதைக் கொண்டாட உடலில் வலுவிருக்காது.

அதனால் தான் இன்று உலகம் முழுக்க வாழும் காலத்திலேயே மகிழ்ச்சியோடு வாழ்வதை ஊக்குவிக்கும் வாழ்க்கை முறைகளுக்கு இளைஞர்கள் தாவுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறை தான் ஈக்கீகய். 

ஜப்பானில் ஒரு சிறுதீவில் பின்பற்றப்பட்ட இந்த வாழ்க்கை முறை இன்று உலகமெங்கும் பல லட்சம் பேரால் கொண்டாடப்படுகிறது. இந்த வாழ்வு முறை குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆல்பர்ட் லைபர் மேன், ஹெக்டர் கார்சியா என்கிற இரண்டு எழுத்தாளர்கள் எழுதிய Ikigai: The Japanese Secret to a Long and Happy Life என்கிற நூல் உலகெங்கும் கோடிக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன. எளிமையான மொழியில் அழகிய வடிமைப்பில் வந்திருக்கும் நூல், வாய்ப்புள்ளவர்கள் வாசித்து விட்டுச் சொல்லுங்கள்.  

ஈக்-ஈ-கய்... இதில் ஈ என்பதைச் சொல்லும் போது புன்னகைத்துச் சொல்ல வேண்டுமாம்...! ஏன் தெரியுமா... எப்போதும் மகிழ்ச்சியும் புன்னகையுமாக எப்படி வாழ்வது என்பதைத் தான் ஈக்கீகய் கற்றுத் தருகிறது. ஈக்கீகய் என்றால் Reason for being. இருத்தலுக்கான நோக்கம். நாம் வாழ்வதன் நோக்கத்தைக் கண்டறிவதன் வழி அன்றாட மகிழ்ச்சியை அடைதலே ஈக்கீகய்.

ஒக்கினாவா மொழியில் `ரிட்டையர்மென்ட்' என்கிற சொல்லுக்கு இணையான சொல்லே கிடையாது. ஏனெனில், அங்கே யாருமே Retire ஆவதில்லை. அங்கே மரணம் தான் ரிட்டையர்மென்ட். 

பார்ட்டி பண்ணும் பையனோ பல்லுப் போன பாட்டியோ உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். உழைப்பு என்றதும் நாம் செய்கிறோமே... பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கடனே என்று பார்க்கிற வேலை இல்லை... மனதிற்குப் பிடித்த வேலையை மனநிறைவோடு நூறு சதவீத ஈடுபாட்டோடு செய்வது தான் ஈக்கீகய்!  நீங்கள் எதில் சிறந்து விளங்குகிறீர்களோ, எதை எப்போதும் செய்வதற்கு விரும்புகிறீர்களோ அதுவே உங்கள் ஈக்கீகய்.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஈக்கீகய் உண்டு. அதை எப்படிக் கண்டுபிடிப்பது... அதைக் கடைசியில் பார்ப்போம். அதற்கு முன்னால் ஈக்கீகய் பின்பற்றுவோரின் வாழ்க்கை முறையில் நாம் கற்றுக் கொள்ள சில விஷயங்கள் உண்டு. 

1 - உலகம் எத்தனை வேகமாக இயங்கினாலும் நாம் நம்முடைய மன அமைதியைக் குலைத்துக் கொள்ளாமல் மிகப் பொறுமையாக வாழப் பழக வேண்டும். ஸ்லோமோஷனில் வாழ்தல் எனலாம். சவுக்கு சப்தத்தில் ஓட நாம் மாடுகள் அல்ல... என்பதை மனதில் கொண்டு நம்முடைய மன அமைதி குலையாத வண்ணம் வேலைகளை முழுமையாகத் திருத்தமாக செய்ய வேண்டும். 

2 - எவ்வளவு பிடித்த உணவாக இருந்தாலும் முக்கால் வயிற்றுக்கு மேல் உண்ணக் கூடாது. இன்னும் இரண்டு கவளம் சாப்பிடத் தோன்றும் போது நிறுத்தி விடுங்கள். 

3 - ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை நண்பர்களுக்கும் குடும்பத்திற்கும் என ஒதுக்குவதை கடுமையாகக் கடைப்பிடியுங்கள். நண்பர்கள் நேரத்தில் உரையாட, ஆட, பாட, விளையாட என உற்சாகமாயிருங்கள். 

4 - ஜிம்முக்குப் போய் கர்லா கட்டைகளைக் காட்டுத்தனமாக சுழற்றவெல்லாம் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் உடலின் ஒவ்வொரு பகுதிகளையும் அசைத்துச் செய்கிற சிறிய உடற்பயிற்சிகளை யோகாவோ தியானமோ, தாய்ச்சியோ, வார்ம்அப்களோ செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

5 - உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சூழலையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் எல்லோரையும் நம்மால் மாற்றி விட முடியாது என்பதைப் புரிந்து கொள்வதும், சக மனிதர் குறித்த தேவையற்ற முன் முடிவுகளைத் தவிர்த்து நட்போடு அரவணைத்துக் கொள்வதையும் வழக்கமாக்குங்கள்! 

6 - உங்களைப் போலவே இயற்கையையும் நேசிக்கக் கற்றுக் கொள்வது முக்கியம். உங்களைச் சுற்றி இருக்கிற இயற்கை வளங்களை அதன் அழகைக் கொண்டாடுங்கள். அதை மேலும் மெருகேற்ற உங்களால் முடிந்த சிறிய பங்களிப்பைச் செய்யுங்கள். அதன் அழிவில் பங்கேற்காதீர்கள். 

7 - நமக்குக் கிடைக்கிற எல்லா விஷயங்களுக்கும் நன்றியுணர்வோடு இருப்பது முக்கியம் என்கிறார்கள் ஒக்கினவா மக்கள். அவர்கள் உண்ணும் உணவில் தொடங்கி நடக்கும் நிலம் வரை அனைத்தையும் அனைவரையும் மதித்து நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். 

8 - உலகமே கற்றுக் கொடுத்த பாடம் தான். Live the moment. எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் இன்றி, கடந்த காலம் குறித்த சோகங்கள் இன்றி இப்போதைய தருணத்தைக் கொண்டாடப் பழகுங்கள்.  

9 - உங்கள் ஈக்கீகயை கண்டு பிடித்து அதைப் பற்றிக் கொள்ளுங்கள். அதில் உங்களை மூழ்கடித்துக் கொள்ளுங்கள். 

இந்த ஒன்பதும் தான் ஈக்கீகய் முன் வைக்கும் எளிய வாழ்க்கை முறை. இதைச் செய்ய அமேசானில் எதையும் ஆர்டர் செய்யத் தேவையில்லை. லட்சக்கணக்கில் செலவழிக்கவும் தேவையில்லை. கொஞ்சம் பொறுமையும், நன்றியுணர்வும், அன்பும், சுய மற்றும் பொது அக்கறையும் இருந்தாலே போதும். 

சரி நம் ஈக்கீகயை எப்படிக் கண்டு பிடிப்பது?

ஈக்கீகயின் முக்கிய கூறுகள் நான்கு... திறமை, ஆர்வம், தேவை மற்றும் குறிக்கோள். அதையொட்டி நான்கு கேள்விகளை உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதற்கான பொதுவான விடை தான் ஈக்கீகய். 

கேள்வி 1 - நான் என்னவாக ஆக விரும்புகிறேன். அதைத் தான் தினமும் செய்து கொண்டிருக்கிறேனா? (ஆர்வம்)

கேள்வி 2 - நான் எதில் சிறந்து விளங்குகிறவனாக இருக்கிறேன்? (திறமை)

கேள்வி 3 - நான் எதைச் செய்தால் எனக்கு மகிழ்ச்சியும் பணமும் கிடைக்கும்? (தேவை)

கேள்வி 4 - நான் வாழும் உலகின் தேவை என்ன... (குறிக்கோள்)

இந்த நான்குக்குமான விடைகளில் நம் வாழ்வின் நோக்கமும் பொருளும் பொதிந்திருக்கிறது. நாம் செய்யும் வேலை நமக்கும் பலனளித்து, நாம் சார்ந்திருக்கும் மக்களுக்கும் உலகுக்கும் நன்மை அளிப்பதாகவும் இருப்பதே ஈக்கீகய். இதைக் கண்டறிந்து இதற்கு ஏற்ப உங்கள் நிகழ்காலத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் ஓய்வுக்கால மகிழ்ச்சி இன்றே சாத்தியமாகும். 

ஈக்கீகய் வலியுறுத்துவது ஒன்று தான்... வாழ்நாள் முழுக்க உழைத்துக் கொண்டேயிருங்கள். ஆனால் அந்த உழைப்பு உங்களுக்கானதாக உங்களை மகிழ்விப்பதாக இருக்கட்டும் என்பது தான். அதுதான் ஒக்கினாவா மக்களின் longevity ரகசியம்!

அன்பை விதைப்போம்''



நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற மிக அழகான,  இந்த உலகம், அன்புக்காக ஏங்கித் தவிக்கிறது. 

அன்பு செய்கின்ற மனிதர்களாலே, இவ்வுலகம் அழகானதாக உருமாறி நிற்கிறது. 

அன்பு மட்டுமே இவ்வுலகில் மாறாமல் இருக்கிறது. அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்படவேயில்லை. 

எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு இரக்க குணம் மேலோங்கி இருக்கும்..

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சுப் பழங்களை வாங்குவார்.

பழங்களை எடை போட்டு வாங்கிப் பணம் கொடுத்த பின் அந்தப் பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து அங்கேயே சாப்பிடுவார்.

''என்ன பாட்டி, இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது'' என்று சொல்லி, அந்தப் பாட்டியிடம் ஒரு பழத்தைக் கொடுத்து சாப்பிடச் சொல்லிக் கொடுப்பார்..

உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு இல்லையேப்பா ,
நல்லாத் தானே இருக்கு” என்பார்.

உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த அவர் மனைவி ஒரு நாள் தன் கணவரிடம்,

'ஏங்க..பழங்கள் நல்லா இனிப்பாகத் தானே இருக்கு.ஏன் தினமும் இப்படி நல்லா இல்லைனு பொய் சொல்லி நாடகம் போடுகிறீர்கள் என்று கேட்டார். ”

அந்த இளைஞர் சிரித்து கொண்டு தன் மனைவியிடம்,“அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களைத் தான் விற்கிறாங்க..

ஆனாலும் தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க.நான் இப்படிக் குறை கூறி கொடுப்பதால் தினம் அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுறாங்க என்றார்.”

தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து வந்தார்

அவர் அந்தப் பாட்டியிடம்,,அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான்.''. இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாகப் போட்டுப் பழங்களைக் கொடுக்கிறாய்..?.”

உடனே அந்தப் பாட்டி புன்னகை ஒன்றை பூத்து  விட்டு,

அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காகவே இப்படிக் குறை கூறுவது போலக் கூறிக் கொடுத்து சாப்பிட வைக்கிறான்.

இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான். நான் எடை அதிகமாக பழங்களைப் போடுவதில்லை...

மாறாக,அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்து விடுகிறது என்றார் அன்போடு.

இப்படிப்பட்ட சின்ன சின்ன அன்பில் தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கிறது...

ஆம்.,நண்பர்களே..

அன்பை விதைப்போம்... ஆனந்தத்தை அறுவடை செய்வோம்..

முடியவில்லையென்றால்,

,அனுதாபத்தையாவது அறுவடை செய்யும் வகையில் நம்மை மாற்றிக் கொள்வோம். 

அப்படியில்லாமல், வெறுப்பை மட்டுமே அறுவடை செய்யும் நிலை ஏற்படுமானால், நாம் தோற்றுப் போய் விட்டோம் என்று அர்த்தம்.

(உடுமலை சு.தண்டபாணி).....🌹🌹🌹🙏🏻💐💐💐

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...