குழந்தைகள் பாதுகாப்பு




* கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும்.

* சிகரெட், போதைப் பொருட்களைத் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.

* தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவானால், மன அழுத்தம் ஏற்பட்டு  வயிற்றிலிருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.



* குழந்தைகளின் பால் புட்டிகளையும், நிப்பிள்களையும் கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்த பின் பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும். குழந்தை குடித்து மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.

* குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.

* சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.

* குழந்தைகள் அறைக்குள் சென்று கதவைத் தாழ் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாழ்ப்பாளை அமைக்கவும்.

* குழந்தைகளுக்கான மருந்துக் குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.

* கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

* குழந்தைக்கு எட்டாத இடத்தில் தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விசயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.
* கொசுவர்த்திச் சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

* இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தைகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.

* இழுப்பான் (ஜிப்) வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அது போன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஆண் குழந்தைகள் பிறப்புறுப்பு – இழுப்பானை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)

* தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ வாய்ப்பு இருக்கிறது.

* சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.

* கதவைத் திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவின் தாழ்ப்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

* படுக்கை அறையில் படுத்துக் கொண்டே விளக்கைப் போடத் தாழ்வாக மின் வசதிகள் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை அதற்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான ஏற்பாடுகளை உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.

* வீட்டில் உபயோகப்படுத்தும் (எலெக்ட்ரானிக்) மின்சாதனப் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.

* அரவை எந்திரங்கள் (மிக்ஸி, கிரைண்டர்) உபயோகம் முடிந்தால் அவற்றை அணைப்பதோடு மின் இணைப்பையும் உருவிப் போடுவது நல்லது. காரணம் அவற்றோடு விளையாடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

* அலைபேசி  போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.

* துணியைத் தேய்த்து விட்டு இஸ்திரிப் பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.

* சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. சிறு நாற்காலியைப் பிடித்துக் கொண்டு நிற்பது, உணவு உண்ணும் மேசை மீது  உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

* சுமார் இரண்டு வயதில் நாற்காலி மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேசையை இழுக்க முயற்சிக்கிறது.

* ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.

*  ரசாயன அழகு சாதனங்கள் (சென்ட், சேவிங் லோசன்) போன்றவற்றை தந்தை உபயோகம் செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, சவரக் கத்திகளை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.

* வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.

* கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

* தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்.அதன் மூலம் கிருமிகள் தாக்கி நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

* சூடான எந்தப் பொருளையும் உணவு உண்ணும் மேசையின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேசை மீது விரிக்கப்படும் துணி, மேசையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.

* ஜன்னல்கள், மொட்டைமாடிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.
* கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு இயல்பானது. கவனம் தேவை.

* எங்கேயாவது இருசக்கர வாகனத்தில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது இருசக்கர வாகனம் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வரும்போது அவர்களின் கால்,கைகள் பட்டுவிடலாம்.கவனம் தேவை.

* வீட்டில்  இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். இரு சக்கர வாகனத்தை மூடி வைக்கலாம்.

* குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.

* குழந்தைகளை பெரிய கடைகளுக்கு பொருட்களை வாங்கப் போகும் போது கொண்டு செல்லாதீர்கள்.

* தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.

* வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விசப் பூச்சிகள் அதில் மறைந்திருக்கலாம்.

* குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.

* துருப்பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப்பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.

* தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.

* குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவிச் சுத்தமாக்கிக் கொடுக்கவும்.

* குழந்தகளுக்கு உடைகள்,காலணிகள், உறைகள் போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.

* நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளைக் குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்காதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.

* வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.

* விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.

1 comment:

  1. Thank you for the goⲟɗ writeup. It actually used to bee a amusement account it.
    Look advanced to more introduced аgreeable from you! However,
    how can we keep іn touch?

    ReplyDelete

சமீபத்திய பதிவுகள்

கும்பகோணம் டிகிரி காபி

கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா? பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம்...